உங்கள் வீட்டிலும் தங்கம் தங்கும்!

Share this :
No comments


உலோகங்களில் தங்கத்துக்கென்று தனி மதிப்பு எப்போதும் உண்டு. நம் வீடு என்றில்லை; ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதார பலத்தையே நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது இந்த மஞ்சள் உலோகம்.

இதன் அத்தியாவசியத்தைக் கருதித்தான், 'ஒரு குந்துமணி தங்கமேனும் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும்’ என்று பெரியோர் கள் அறிவுறுத்துகிறார்கள். திருமணத்தின்போது பெண்ணுக்கும் பிள்ளைக்குமான சீதனமாக தங்க நகைகள் அளிப்பதற்குக் காரணமும் இதுதான். தங்க ஆபரணங்கள் அழகுக்கு மட்டுமல்ல; எதிர்கால வாழ்வுக்கான பாதுகாப்பும்கூட! எனவே, குழந்தைகளைக் கொஞ்சும்போதும் குணத்தில் சிறந்தவர்களைப் போற்றும்போதும் 'என் தங்கமே’ என்றும், 'பத்தரைமாற்றுத் தங்கமாயிற்றே அவர்’ என்றும் தங்கத்தோடு ஒப்பிட்டுச் சொல்வது மிகப்பொருத்தம்தான் இல்லையா?

நவகிரகங்களில் முழு முதல் சுபக் கிரகமாக விளங்குபவர் குரு. இவருக்கு உரிய உலோகம் தங்கம். குருவுக்குப் 'பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. பொன் என்றால் தங்கம்தான்; தங்கம் என்றாலே குருதான்!

ஆக, குரு பலமிக்க ஜாதகருக்குப் பொன்னும் பொருளும் ஏராளமாகச் சேரும். ஒருவரது ஜாதகத்தில் குருவானவர் தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் ஆட்சியாகவோ, தனுசில் மூலத்திரிகோண பலம் பெற்றோ, கடகத்தில் பரமோச்ச நிலை அடைந்தோ இருந்தால், அவருக்கு ஏராளமான தங்கம் சேரும்.

லக்னத்துக்கோ சந்திர ராசிக்கோ குருவானவர் 1, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இருந்தாலும், தங்கச் சேர்க்கை உண்டாகும்.

குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றில் பிறந்து, குரு பலமும் கூடியிருக்கப் பெற்றவர்களுக்குத் தங்கம் சேரும்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்து, பிறந்த தேதி எண்ணின் நாயகனான குரு பகவான் ஜாதகத்தில் வலுத்திருக்கும் அன்பர்களுக்கும் தங்கம் ஏராளமாகச் சேரும்.

மார்ச், டிசம்பர் மாதங்களில் பிறந்தும், குரு பலம் பெற்றும் திகழும் ஜாதகர்களுக்கும், தனுசு, மீன- ராசி, லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் தங்கம் அதிகம் சேரும்.

குரு பகவான் வலுத்து, 10-ஆம் வீட்டோடும், 10-ஆம் வீட்டு அதிபதியோடும் தொடர்புகொண்டிருந்தால், தங்கம் சம்பந்தமான தொழிலில் ஜாதகர் ஈடுபடுவார். குரு, 10-ஆம் வீட்டோன், 11-ஆம் வீட்டோன் ஆகியோர் ஒன்று கூடியிருந்தால் தங்கம் மூலம் அதிகம் ஆதாயம் கிடைக்கும்.

மேலும், குரு 4-ல் வலுத்திருந்தாலும் தங்க நகை நிறையச் சேரும்.

ஒருவரது ஜாதகத்தில் 4, 7, 10 ஆகிய இடங்களுக்கு குரு அதிபதியாகி, கேந்திராதிபத்திய தோஷம் பெற்று இருந்தாலும்... 5, 9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் வலுத்திருக்கும்போது கேந்திராதிபத்திய தோஷம் விலகி, பொன், பொருள் சேர்க்கை அதிகம் உண்டாகும்.

குரு பகவான் தன்னுடைய நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோருடன் சேர்ந்து வலுத்திருந்தால், தங்கம் சேரும். குருவின் கிழமையான வியாழக்கிழமை அல்லது உத்தராயன காலம் அல்லது வளர்பிறையில் பகல் வேளையில் பிறந்தவர்களுக்கு குரு பலம் இருக்குமானால், ஏராளமான தங்கம் சேரும்.

குரு 2-ல் இருந்தால், குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்குத் தங்கத்தை அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.

குரு 4-ல் இருந்தால் நண்பர்கள், உறவினர்கள் மூலம் தங்கம் சேரும். குரு 5-ல் அமர்ந்து 5-ம் வீட்டோன் வலுத்திருந்தால், குழந்தைகள் வளர்ந்து சம்பாதித்து, உங்களுக்குத் தங்கம், தங்க நகைகள் வாங்கிக் கொடுப்பார்கள்.

குரு 7-ல் அமர்ந்து, களத்திரகாரகன் சுக்கிரனும் பலம் பெற்று, 7-ஆம் வீட்டு அதிபதிக்கும் குருவுக்கும் சம்பந்தம் (பார்வை, சேர்க்கை) இருந்தால், மனைவியால் ஏராளமான தங்கம் சேரும்.

குரு 9-ல் வலுத்து, சூரியனும் 9-ஆம் வீட்டோனும் பலம் பெற்று இருந்தால், தந்தை உங்களுக்குத் தங்க அணிகலன்களைப் பரிசாக அளிப்பார். தந்தையிடம் உள்ள பொருட்களும் (பிதுரார்ஜிதம்) உங்களுக்குக் கிடைக்கும்.

குரு 10-ல் அமர்ந்து, தொழில் ஸ்தானாதிபதியான 10ஆம் வீட்டோனும் வலுத்திருந்தால், தொழில் அதிபர்கள், முதலாளிகள் மூலம் உங்களுக்குத் தங்கம் பரிசாக கிடைக்கும். தொழிலில் நீங்கள் செய்யும் சாதனைக்காகவும் தங்கப் பதக்கம் கிடைக்கும்.



இன்னும் சிலர் இருக்கிறார்கள்... அவர்களுக்குத் தங்கம் என்றாலே பிடிக்காது; அவர்களிடம் தங்கமும் தங்காமல் போகும். இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமா?

குருவுக்கு புதனும் சுக்கிரனும் எதிரிகள். புதனின் ராசிகளான மிதுனம், கன்னி ஆகியவையும், சுக்கிரனின் ராசிகளான ரிஷபம், துலாம் ஆகியவையும் ஒருவருக்கு ராசி, லக்னமாக அமைந்து, குரு பலமும் இல்லாமல் போகுமானால், அவருக்குத் தங்கம் தங்காமல் போகும். ஒருவேளை தங்கம் சேர்ந்தாலும், அது உபயோகம் இல்லாமல் போகும்; வங்கி லாக்கரிலோ, அடமானமாகவோ இருக்கும்.

மேஷம் மற்றும் மகர லக்ன- ராசிகளில் பிறந்தவர்களுக்குக் குரு விரயாதிபத்தியம் பெறுகிறார். குறிப்பிட்ட ஜாதகர்களுக்கு குரு பலம் இல்லாமல் போகுமானால், தங்கம் தங்காமல் போவதுடன், திருடு போகவும் கூடும். தங்கத்தைத் தொலைத்துவிடவும் நேரும்.

பொதுவாக, குரு விரய ஸ்தானம் பெற்று, பலம் குறைந்து, பாபக் கிரகச் சேர்க்கை மற்றும் பார்வையுடன் இருந்தால், குறிப்பிட்ட ஜாதகர் தங்க நகைகளைத் தொலைத்துவிட்டு அல்லாடுவார்.

தங்கம் வீட்டில் தங்கவும், அதிகம் சேரவும் வழிபாடுகள்:

தங்கத்துக்குக் காரகத்துவம் பெற்ற குரு கிரகத்துக்கு வியாழக்கிழமைதோறும் அர்ச்சனை, ஆராதனை செய்வது நல்லது.

குருவுக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடலாம்.

குருவுக்கு அதிதேவதையான தட்சிணாமூர்த்தியையும், பிரம்ம தேவனையும் வழிபடலாம்.

குருவின் பரிகார ஸ்தலமும், க்ஷேத்திரமுமான திருஆலங்குடி திருத்தலத்துக்கு வியாழக்கிழமையன்று சென்று அர்ச்சனை, ஆராதனை செய்து வழிபடுவது சிறப்பாகும். திருச்செந்தூர் செந்திலாண்டவனை வழிபடுவது நல்லது.

மனைவியும் நகை யோகமும்!

ஏழாம் வீட்டோன் மனைவியைக் குறிக்கும் கிரகம் ஆவார். அவர் 9-ல் இருப்பது விசேஷமாகும். ஒரு கேந்திராதிபதி, ஒரு திரிகோண ஸ்தானத்தில் இருப்பது யோகமாகும். மனைவியால் சகல பாக்கியங்களும் சேரும். பொன் (தங்கம்), பொருள் சேர்க்கை உண்டாகும்.

ஆண் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன். இவர் ஆட்சி, உச்சம், நட்பு வீடுகளில் வலுத்தாலும் மனைவியால் பொன் பொருள் சேரும். 7-ஆம் வீட்டோனுக்கும், சுக்கிரனுக்கும் குருவின் பார்வை, சேர்க்கை அமையுமானால் மனைவியால் தங்கம் சேரும்.

7-ஆம் வீட்டுக்கு 5-ஆம் இடமான 11ஆம் வீட்டிலும், 9ஆம் இடமான 3ஆம் வீட்டிலும் சுபக் கிரகம் இருந்து, (லக்னாதிபதி, 5ஆம் வீட்டோன், 9ஆம் வீட்டோன், சுக்கிரன்) குருவின் சம்பந்தம் பெற்றிருந்தால் மனைவியால் பொன்னும் பொருளும் சேரும்.

No comments :

Post a Comment