வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-11

Share this :
No comments


மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று முக்கிய கடன்களைத் தீர்த்துதான் ஆக வேண்டும் என்கின்றன ஞானநூல்கள். அதாவது தெய்வங்களுக்கான வழிபாடுகள், முன்னோர் ஆராதனை, மகான்கள் மற்றும் ரிஷிகளைப் போற்றி வணங்குவது மற்றும் அதிதி உபசாரம் முதலான கடமைகளையே நமக்கான கடன்களாகச் சொல்லி, அவற்றை அனுசரிக்கும்படி வலியுறுத்துகிறது சாஸ்திரம்.

இவை தவிர, பொருளாகவும் செயலுதவியாகவும் மற்றவர்களிடம் பட்ட கடன்களையும் நாம் அடைத்தாக வேண்டும். 'இந்தப் பிறவியில் நாம் கடன் வாங்கிக்கொண்டு பிறரை ஏமாற்றினால் அடுத்த பிறவியில் கொடிய மிருகங்களுக்கு நடுவே, ஒரு சாதுவான பிராணியாக நின்று, அவற்றுக்கு உணவாகும் நிலை வரும்’ என எச்சரிக்கிறது கருட புராணம்.

எனவே, கடன் பெற்றவர்கள் 'கடனே’ என்று செயல்படாமல், பொறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் அந்தக் கடனை அடைக்க முயற்சிக்க வேண்டும்.

யார் யாரெல்லாம் கடன்தொல்லையால் அழுந்த நேரிடும்? கடன்பட நேரிட்டாலும் வெகுசீக்கிரம் அதிலிருந்து மீள்வதற்கு வழியென்ன? ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் என்னென்ன நிலையில் இருந்தால் நமக்கு சாதகம் அல்லது பாதகம்? இவை குறித்து விரிவாக அறிவோமா?!

ஜாதக அமைப்பின்படி குரு மகரத்தில் நீசமாகி விரயம் அடைந்தாலும், 6-ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவை சனி பார்த்தாலும் அடைக்கமுடியாதவாறு கடன் அழுத்தும்.

செவ்வாய் தசையில் சுய புக்தி, சனி தசையில் செவ்வாய் புக்தி நடக்கும்போது, பெண்கள் மூலமாக 60% கடன் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

குரு தசை நடக்கும்போது கேது, செவ்வாய் மற்றும் ராகு புக்தியில் கடன் சுமை வரக்கூடும்.

சனி தசை- கேது புக்தியில், மகன் மூலமாகக் கடன் தொல்லை ஏற்படும்.

ராகு தசை நடக்கும்போது... சனி, சூரியன் மற்றும் செவ்வாய் புக்தியில் 30% கடன் தொல்லை, சுற்றி உள்ள நபர்களால் ஏற்படும்.

புதன் தசை நடக்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். நாம் ஜாமீன் போட்டு கடன் வாங்கிக் கொடுத்த நண்பர் அதை ஒழுங்காகக் கட்டாமல் விட்டுவிட, நாம் கட்டவேண்டிய நிலை ஏற்படும். கேது தசை- சந்திர புக்தியில் நகை மூலமாகக் கடன் வரும்.

சுக்கிர தசை- சூரிய புக்தியில் வங்கிக் கடனை அடைக்க இயலாத நிலை ஏற்படும். சனி புக்தியில் மனைவி, மகனுக்கான வைத்தியச் செலவுகளாலும், கேது புக்தியில் வண்டிகள், எருதுகள், பசுக்கள் வாங்குவதாலும் கடன் உண்டாகும். சிறிய கடன்கள் கூட அடைபடாமல், வட்டி அதிகமாகி வாட்டக்கூடும்.

குரு தசையில் (சுய புக்தியும்) அடுத்து வரும் 16 வருடங்களும், சுக்கிர தசை 20 வருடங்களும்... இந்தக் காலகட்டத்தில் கடன் வாங்கினால் சுக தசை காப்பாற்றும்; தப்பித்துக் கொள்ளலாம் என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறு. சிலர் வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பி அடைக்காமல், கடன் கொடுத்த நபர் தங்கள் வீட்டுப் பக்கமே வராமல் இருக்க, துர்தேவதை பூஜைகள்கூட செய்வது உண்டு. இதுவும் தவறான செயல்பாடு. வாங்கிய கடனை இன்முகத்தோடு அடைப்பதற்கு இறைவழிபாடு செய்ய வேண்டும்.

கடன் தீர்க்கும் ருணவிமோசன பூஜை...

வளர்பிறையில் வரும் செவ்வாய்க் கிழமையில் அதிகாலையில் எழுந்து நீராடி முடித்து, பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அங்கே, மணைப்பலகை ஒன்றை வைத்து, செந்நிற கோல மாவினால் 16 சங்குகள் வட்ட வடிவில் அமைவது போன்று கோலம் போட வேண்டும். சங்குகளின் மேல் நெய் தீபம் ஏற்றி வைத்து, கீழ்க்காணும் அங்காரக துதியைச் சொல்லவேண்டும்.

பின்னர், சாம்பிராணி மற்றும் குங்கிலிய தூபம் காட்டி, நைவேத்தியம் சமர்ப்பித்து, புஷ்பாஞ்சலியுடன் கற்பூர ஆரத்திக் காட்டி வழிபட வேண்டும்.

ஓம் அவந்தி தேசாதிபனே போற்றி
ஓம் பாரத்வாஜ வம்சவா போற்றி
ஓம் முருகனின் உருவே போற்றி
ஓம் மேஷராசிப் பிரியனே போற்றி
ஓம் விருச்சிகத்தில் இருப்பாய் போற்றி
ஓம் தென் முகத்தவனே போற்றி
ஓம் தேவியின் பிரியனே போற்றி
ஓம் பூமியின் புதல்வனே போற்றி
ஓம் சகோதர காரகனே போற்றி
ஓம் குஜனே போற்றி
ஓம் ரணகாரனே போற்றி
ஓம் ருணரோக நிவாரணனே போற்றி
ஓம் கடன் தீர்ப்பாய் போற்றி
ஓம் மகீ சுதனே போற்றி
ஓம் நவநாயக உருவே போற்றி

பிறகு, கீழ்க்காணும் மந்திரத்தை 9 முறை கூறி, ஆத்ம பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

ஓம் ரக்தமால்யாம் பரதரம் சக்திசூலகதாதரம்
சதுர்புஜம் மேஷவாகம் வரதாபய பாணினம்
ஓம் அங்காரக மகீபுத்ர பகவன் பக்தவத்ஸலக
நமோஸ்துதே மமசேஷம் ருணமாசு விமோசய!

இந்த வழிபாட்டை முறையாகச் செய்து வந்தால், வாங்கிய கடன்களை விரைவில் அடைக்க வழிபிறக்கும்.

No comments :

Post a Comment