திருமண இணையதளத்தில் போலியான விளம்பரம் கொடுத்து 30 பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் ரூ.2 கோடி வரை பண மோசடி செய்த பலே கில்லாடியை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
கல்கத்தாவை சேர்ந்த தன்மே கோசுவாமி(40) என்பவர், திருமண இணைய தளத்தில் தன்னை நேரடி வரி துணை கமிஷனர் என்று போலியாக விளம்பரம் கொடுத்து மும்பை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் வசதி படைத்த பெண்களுக்கு வலை வீசி அவர்களை திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஹேமந்த் குப்தா என்ற பெயரும் உண்டு.
அதன்பின் அவர்களிடமிருந்து நகை மற்றும் பணங்களை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டி விடுவார். கடந்த சில வருடங்களாக அவர் இந்த மோசடியை செய்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் 30 பெண்களிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
அதிலும் மைசூரில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவரிடமிருந்து ரூ.50 லட்சமும், மும்பையில் ஒரு பெண்ணிடம் ரூ.22 லட்சமும் மோசடி செய்துள்ளார் குப்தா.
இன்னும் எத்தனை பேர் இவரிடம் ஏமாந்துள்ளார்கள் என்ற பட்டியலை போலீசார் தயாரித்து வருகிறார்கள். மேலும், இவரிடம் ஏமாந்தவர்களை தொடர்பு கொண்டு, குப்தா அவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்ற தகவலை விசாரித்து வருகின்றனர்.
குப்தாவை இன்னும் இரண்டு மாநில போலீசார் தேடி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment